புரிந்ததாய்
புரிந்ததாய்
எண்ணித்தான்
கடக்கின்றேன்
புதிய பக்கத்திற்கு
அதன் முதல் வரி
முடிக்க முன்போ
முன்னைய பக்கத்தில்
பல முரண்பாடுகள்
புதிது புதிதாய்
பல கேள்விகள்...!!!
எதிர்வரும்
பக்கங்களின்
எண்ணிக்கையும்
படித்து முடித்திட வேண்டும்
என்ற கட்டாயமும்
எப்போதும்
ஒரு பக்கமாய்
அழுத்தியே
அழைத்துச் செல்கின்றன...!!!
போக போக
கேள்விகள் அதிகரித்து
செல்கின்றன
சில பதில்கள்
வாழ்வின் போக்கில்
கிடைக்கப் பெற்றாலும்
சில கேள்விகள் மாத்திரம்
பதிலற்று
தொக்கி நிற்கின்றன...!!!
பாதிக் கேள்விகளுக்கு
பதில் தெரிந்தும்
அதை
என் மனமே ஏற்றுக் கொள்ள
மறுக்கின்றது....!!!
மீதிக் கேள்விகளின்
பதில் கிடைக்கப் பெறும்
வேளை
கேள்விகளே
வேறாய் மாறிப்போய்
நிற்கின்றது....!!
சிலவேளை
இதெல்லாம்
புரிந்து நீ
என்ன
கிழிக்கப் போகின்றாய்
என்றெல்லாம்
என் மனமே
என்னை கேலி செய்கின்றது...!!!!
இருப்பினும்
அடுத்தப் பக்கங்களில்
ஆங்காங்கே
தூவப்பட்டிருக்கும்
ஆச்சரியங்களும்
மகிழ்ச்சிகளும்
தொடர்ந்து
செல்லச் செய்கின்றது....!!!
இந்த உலகில்
எந்த கேள்விக்களுக்கும்
எப்போதும்
அச்சாய் பொருந்தும்
பதில்கள்
இல்லை....!!!
நாமே அவற்றை
பொருத்திக் கொண்டால்
தான்
உண்டு...!!!!
Comments
Post a Comment